பள்ளிகளில் மாணவர்களை நடத்தும் விதம் குறித்து ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது, தற்கொலையைத் தடுப்பது ஆகியன குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவர் நரேந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் உடலையும், மனதையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்; அவர்களது மனநிலைக்கு ஏற்றவாறு கற்றல் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களை நடத்தும் விதம் குறித்து ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.
அப்போது மாணவர்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதேபோன்று மாணவர்களுக்கும் முறையான கவுன்சிலிங் அளிக்கப்படும்.
அவர்களது விருப்பம், தேவையைப் பொறுத்து யோகா பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
லண்டன் பயணம்: சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை லண்டன் செல்கிறார். அவருடன் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவும் செல்ல உள்ளார்.
அமைச்சர் வரும் 25 -ஆம் தேதி சென்னை திரும்புவார் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.