ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் செலவு விவரங்கள் குறித்து உண்மையான தகவலைத் தெரிவிக்காத சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் செலவினப் பார்வையாளர்களிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கும், மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயனுக்கும் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற மருதுகணேஷ் மனு அளித்துள்ளார்.
மனு விவரம்:
ஆர்.கே.நகர் தேர்தல் செலவுகள் தொடர்பாக சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் தாக்கல் செய்துள்ள செலவின விவரங்கள் உண்மையானவையாக இல்லை. தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையையும் தாண்டி அவர் அதிகளவில் செலவு செய்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது தினகரனுடன் தினமும் 300 பேர் ஊர்வலமாக சென்றதுடன், அவரின் சின்னமான பிரஷர் குக்கரையும் எடுத்துச் சென்றனர். மேலும், வாக்காளர்களுக்கும் தினகரன் சார்பில் பிரஷர் குக்கர் தரப்பட்டது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குக்கர்கள் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஒரு குக்கரின் விலை ஆயிரம் என்றாலே அதன் மொத்த தொகை ரூ.10 கோடியாகும். வாக்காளர்களுக்கு ரூ.20-யை டோக்கனாக அளித்து வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரமும் தினகரன் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் ஆணையத்தால் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, தேர்தல் செலவினங்களை மறைத்து கணக்குத் தாக்குதல் செய்துள்ளதுடன், தேர்தல் ஆணைய விதிகளை மீறி முறைகேடாகவும் செயல்பட்ட தினகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.