போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை பொதுமக்கள் மீது திணிக்கக்கூடாது என மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுத்தான் ஐரோப்பாவிலிருந்து பேருந்து என்ஜின்களை இறக்குமதி செய்துள்ளன. அப்பேருந்துகள் அனைத்தும் கூடுதலாக எரிபொருள் உறிஞ்சும் தன்மையுடையவை. இதனை பயன்படுத்துவதாலும், போக்குவரத்து துறை நிர்வாக சீர்கேட்டாலும்தான் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணமும், நிலுவையில் உள்ளது. இந்த நட்டத்தை ஈடுகட்டுவதற்காகவே, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் மீது திணிக்கக்கூடாது. மேலும், கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டால் பேருந்துகள் எண்ணிக்கை குறைந்து, விபத்துகள் எண்ணிக்கையும் குறையும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட ரயில்கள் மட்டுமே தற்போதும் இயக்கப்படுகிறது.தென்னக ரயில்வே அதிக லாபத்தில்தான் இயங்குகிறது. இருப்பினும், ஏன் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் திருமுருகன்காந்தி.