அரசியல் சூழல் அறிந்து புதிய பறவைகள் சிறகடிக்க வருவதாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாகச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ, அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சுயமரியாதையையும், சமூகநீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூற்றாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறடிகத்துக் கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது.
தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பி வந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திமுக சிறகடித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவும், இன - மொழி பாதுகாப்புக்காகவும் உறுதியுடன் பாடுபடும் இயக்கமான திமுகவின் ஆற்றல் அளவிடற்கரியது.
கள ஆய்வு: பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள இந்தக் களஆய்வில், திமுகவின் ஆணிவேருக்கு முறையாக நீர்பாய்ச்சி, உரமூட்டவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன்.
புகார் தெரிவிக்கலாம்: களஆய்வின்போது, திமுகவினர் மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள், கருத்துகள், ஆலோசனைகளை எல்லாம் சிறுகடிதமாக எழுதி, களஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும். அந்தப் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், திமுகவின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என தமது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.