சென்னை சென்னையில் வாகன சோதனையின் பொழுது சீட் பெல்ட் அணியாததால் போலீசார் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதால், அவமானமடைந்த வாகன ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் புதனன்று காலை சொகுசு ஓட்டல் அமைந்திருந்த பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்த இளைஞர் ஒருவரை போலீஸார் நிறுத்தி விசாரித்தனர்.
அவர் சீட் பெல்ட் அணியாமல் பயணித்துள்ளார். இதன் காரணமாக அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக காரில் இருந்து இறக்கியுள்ளனர். விசாரணையின் பொழுது போலீசார் அவரைத் தகாத வார்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது போலீசார் பொதுமக்கள் மத்தியிலேயே அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த வாலிபர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார். எனவே தனது காரில் அமர்ந்தபடியே போலீசார் தன்னை நடத்திய விதம் குறித்து விடியோ ஒன்றைப் பதிவு செய்து வாட்ஸப்பில் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் திடீரென்று காரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அத்துடன் போலீசாரின் இந்த அராஜக நடவடிக்கையினைக் கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.