பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு முடிவுகள் தமிழக முதல்வர் , போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
பேருந்துக் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் விதமாக கோவை, மேட்டுப்பாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கெடுப்பு இயக்கத்தை திங்கள்கிழமை நடத்தினர்.
இதில், பேருந்துக் கட்டணம் உயர்வு நியாயம், அநியாயம் என்ற தலைப்பில் இரு பெட்டிகள் தயார் செய்து, அதில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களிடம் சேகரித்த வாக்குகளை எண்ணும் பணியில் மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இந்த வாக்கெடுப்பில் கட்டண உயர்வுக்கு எதிராக 2,315 வாக்குகள் பதிவாகி இருந்தன. கட்டண உயர்வுக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக பதிவான கருத்துகளை, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மாதர் சங்கத்தினர் அனுப்பி வைத்தனர்.
தமிழக அரசு உடனடியாக பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடத்தப்படும் என மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.