கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமையன்று (ஜன.25) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு (வயது 74) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலேயே 2-ஆவது உயரிய விருதாகும். முன்னதாக 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதுகுறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பத்ம விபூஷண் விருதுக்காக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு மூலம் அறிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று என்னிடம் கேட்டனர், அதற்கு நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தேன். அப்போது நீங்கள் ஒப்புக் கொள்வதால் இந்த விருது பெருமை அடைகிறது என்று தெரிவித்தனர்.
இது தமிழுக்கும், தமிழ மக்களுக்கும் கிடைத்த கௌரவம். மேலும், தமிழ் மக்கள் மீதும், தமிழகம் மீதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வைத்துள்ள மரியாதையை இது காட்டுகிறது என்றார்.