பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் சனிக்கிழமை (ஜன.27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அரசுப் பேருந்து கட்டணத்தைத் தமிழக அரசு அண்மையில் திடீரென உயர்த்தியது. டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவை காரணமாக பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டதாகக் கூறி, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், போராட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்துள்ளன.