மதுரை: பணம் கொடுத்து பணியில் சேர்ந்தால் அவர்களால் எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும் என்று அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி மற்றும் நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பலர் பணியில் சேர்ந்துள்ளதாகவும் நாளிதழ்களில் கடந்த 27-ஆம் தேதி செய்தி ஒன்று வெளிவந்திருந்தது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளதாகவும், அந்த கடிதத்தில் சுமார் 270 பேர் வரை இவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்திருப்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கானது செவ்வாயன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
அரசுத் தேர்வுகளில் இவ்வாறு பணம் கொடுத்து பணியில் சேர்ந்தால், அவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும்? எனவே இவ்வாறு எத்தனை பேர் பணியில் சேர்ந்துளார்கள்? அவர்கள் மேல் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் மேல் பதியப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? ஆகிய விபரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.