உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஈடுபடுவதை குடும்ப அரசியல் எனக் கூற முடியாது என்று ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான டி.டி.வி. தினகரன் கூறினார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 6 பேருடன் சந்தித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறேன். சிறையில் உள்ள எனது உறவினர்கள் இளவரசி, சுதாகரனைச் சந்திக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் சந்திப்பதையும் காழ்ப்புணர்வு காரணமாக சிலர் கொச்சைப்படுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது.
உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஈடுபடுவதை குடும்ப அரசியல் எனக் கூறுகின்றனர். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதனை குடும்ப அரசியல் என்று கூற முடியாது என்றார் தினகரன்.