பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட நடைமுறைகளில் திருத்தங்கள் வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழகம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரியை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணி புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 12 மாநகராட்சிகளும், 124 நகராட்சிகளும், 528 டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட நடைமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிற பகுதியில் வாழும் மக்கள் இதே உள்கட்டமைப்பை ஒரேசமயத்தில் தங்கள் பகுதிகளிலும் ஏற்படுத்த கோருகின்றனர். நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்ற குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை, பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றை நகர் முழவதும் அமைக்க வேண்டும். பொலிவுறு நகரத்தில் பொதுப் போக்குவரத்து அவசியம் என்பதால், மக்களுக்கு ஏற்ற பேருந்துகளை பொதுப் போக்குரத்துக்காக வாங்கும் அதிகாரத்தை பொலிவுறு நகர வாரியத்திடம் அளிக்க வேண்டு என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் உடனிருந்தார்.