கோயில் குத்தகை விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவு

குற்றாலம் திருக்குற்றாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவரை 8 வார காலத்துக்குள் காலி செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்,

குற்றாலம் திருக்குற்றாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவரை 8 வார காலத்துக்குள் காலி செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உணவகம் நடத்தி வந்தவர் தனசேகர். அந்த இடத்தை காலி செய்ய அறநிலையத் துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகை காலம் முடிந்த பின்னரும் ஆக்கிரமித்துள்ள மனுதாரர், கடந்த 20 ஆண்டுகளாக ரூ. 35 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோயில் நிலத்தை அபகரிக்க மனுதாரர் குடும்பத்தினர் முயற்சித்தது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுக் காலமாக வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?
இந்த முறைகேட்டில் அதிகாரிகளும் ஆக்கிரமிப்பாளர்களுடன் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் கோயில் நிலத்தை இத்தனை ஆண்டுகள் மனுதாரர் ஆக்கிரமித்திருக்க முடியாது. எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. 
இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 
மேலும், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள மனுதாரர் 8 வார காலத்துக்குள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com