ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்காக, நவஜோதிர்லிங்க யாத்திரைக்காக குளிர் சாதன வசதி கொண்ட சிறப்பு சுற்றுலா ரயிலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் தனி யாத்திரை ரயில் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில், நவ ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக ஜூலை 31-ஆம் தேதி குளிர்சாதன வசதிகொண்ட தனி யாத்திரை சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு, திருச்சி, சென்னை, எழும்பூர் வழியாக செல்கிறது. ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வர், மகாகாலேஸ்வர், குஜராத்தில் உள்ள சோம்நாத், மகாராஷ்டிராவில் உள்ள பீம்சங்கர், திரையம்பகேஸ்வர், குருஸ்ணேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி வைத்யநாத் ஆகிய ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று, ஜோதி வடிவான இறைவனைத் தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
இந்த தனி முழு ஏசி யாத்திரை ரயிலில் டீலக்ஸ், ஸ்டேண்டர்டு, கம்பர்ட் என மூன்று விதமான வகுப்புகள் உள்ளன. மூன்று நபர் பகிர்மான அடிப்படையில் ஒரு நபருக்கு டீலக்ஸ் ரூ.60,900, கம்பர்ட் ரூ.42,150, ஸ்டேண்டர்டு ரூ.38,900 என்ற கட்டண விகிதத்திலும் மற்றும் ஒருவர், இருவர் பகிர்மான அடிப்படையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர்கள் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
இந்த யாத்திரை தொடர்பான விவரங்களுக்கு 98409 02919, 98409 02916, 90031 40681 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டும், www.irctctourism.com என்ற இணையதளத்தில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.