சென்னை: அரசியல் களத்தில் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் வறட்சிதான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள தனியார் காட்டில் "சண்டைக்கோழி- 2' படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடிகர் விஷால் புதனன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, "கமல் மற்றும் ரஜினி ஆகியோர் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் ஆதரவு அளிப்பேன்.அவர்கள் இருவரும் அரசியல் களத்தில் ஒன்றுபட்டு செயல்பட்டால் தமிழகத்தில் புரட்சி உண்டாகும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் களத்தில் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் வறட்சிதான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழனன்று பேசிய அவரிடம் விஷாலின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் கூறியதாவது;
அரசியல் களத்தில் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் புரட்சியெலாம் ஏற்படாது; வறட்சிதான் ஏற்படும். இங்கு யார் ஒன்று சேர்ந்தாலும் எதுவும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.