முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் ரூ. 1.10 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அவர் சென்னையில் இருக்கும் போது இந்த வீட்டில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வீட்டில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் ரூ. 1.10 லட்சம் திருடப்பட்டுள்ளதாக ஆயிரம் விளக்கு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வீட்டினர் வெளியூர் சென்றிருந்த போது இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.