மதுரை மாவட்டம் சோழவந்தானில் 7 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சோழவந்தான் சப்பாணி கோயில் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (21). இவரது மனைவி பாண்டிச்செல்வி (20). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது 7 மாத ஆண் குழந்தை (கிஷோர்). இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கடந்த 4 மாதங்களாக பெற்றோர் வீட்டிலிருந்த பாண்டிச்செல்வியை 4 நாள்களுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அஜித்குமார் தனது நண்பர் தவமணியுடன் குழந்தை கிஷோரை அழைத்துக் கொண்டு வீட்டு மாடிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்து விட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
உடனே பாண்டிச்செல்வி குழந்தையை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸார் அஜித்குமார், தவமணி இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தையை தனது நண்பர் தவமணி உதவியுடன் கொலை செய்ததாக அஜித்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.