கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து வெகுவாக உயர்ந்திருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 2,600 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 5,600 கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு தண்ணீர் வரத்து நொடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 25 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடி என கூறப்படும் நிலையில், தண்ணீர் வரத்து இரவு இன்னும்கூடுதலாக உயரக் கூடும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிரதான அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அருவிக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. அதேபோல, பரிசல் ஓட்டவும் தடை வி திக்கப்பட்டுள்ளது.
மழை : ஒகேனக்கல் உள்ளிட்ட பென்னாகரம் பகுதி முழுவதும் திங்கள்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.