அரசு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான உத்தரவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அந்தத் துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்துக்கான சாதகமான சூழலை உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் வழியாக கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. ஆன்-லைன் மூலமான கற்பித்தல் பாடங்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றால் இப்போதைய தொழில் முனைவு குறித்த அம்சங்களை மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ள முடியும்.
எத்தனை கல்லூரிகள்-மாணவர்கள்?: தொழில் முனைவு தொடர்பான விழிப்புணர்களை அளிக்கும் வகையில் பரிட்சார்த்த முறையில் அரசு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படும். கலை-அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 88 கல்லூரிகளுக்கு இதுபோன்ற பயிற்சி மற்றும் கருத்தரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு கல்லூரியிலும் இறுதியாண்டு படிக்கும் 100 மாணவர்கள் இந்த ஒரு நாள் பயிற்சியில் பங்கு பெறுவர். அந்தந்த கல்லூரி வளாகங்களிலேயே இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.44.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.