அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் வீரன் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு பாஜக தேசியத் செயலாளர் ஹெச்.ராஜா இன்று மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை.
தேவையென்றால் அகராதியை பார்க்கலாம். 8 வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமுள்ளது. தமிழக திட்டங்களை கெடுப்பதற்கு நக்சலைட்டுகள் பாதை வகுத்து கொடுக்கின்றனர் என்று கூறினார்.
நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக அரசை பற்றி அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார், மொழி பெயர்ப்பில் தவறு நடந்திருக்கும், இதில் மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான், அமித்ஷா பேசியதை மாற்றிக் கூறியிருப்பார் என நினைக்கிறேன்” என்றார்.