கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) வரை இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னக்கல்லாறில் 170 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம், சின்னக்கல்லாறில் அதிகபட்சமாக 170 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 150 மி.மீ. மழையும், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 130 மி.மீ., நீலகிரி மாவட்டம், தேவாலாவில் 110 மி.மீ., ஜி.பஜாரில் 80 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.