தமிழகத்தில் சிறு, குறு தொழில்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி படிப்படியாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்கள் மூலம் 40 சதவீத வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, 45 சதவீதம் ஏற்றுமதியும் நடைபெறுகிறது. எனவே சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோரின் நீண்டகால கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி, கட்டட அனுமதி, மாசு கட்டுப்பாட்டுத் துறை அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, மின்சார இணைப்பு அனுமதி ஆகியவற்றை குறுகிய காலத்தில் வழங்க வேண்டும்.
வங்கிகள் கடன் வட்டி விகிதத்தைச் சிறு தொழில்களுக்கு குறைத்து அளிக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை 20 சதவீதம் சிறு தொழில்முனைவோரிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த வேண்டும்.
இந்தியப் பொருளாதாரத்தில் அதிக பங்களிக்கும் வகையில் செயல்படும் சிறு குறு தொழில்களைக் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.