கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்த செம்மறி ஆடு, சென்னை வளசரவாக்கத்தில் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வளசரவாக்கம் அன்பு நகரை சேர்ந்தவர் வீரசமர். தமிழ் திரைப்படங்களில் கலை இயக்குநராக வேலை செய்து வரும் இவர், கொம்பன், மருது, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். வீரசமர் கடந்த சில ஆண்டுகளாக செம்மறி வகையைச் சேர்ந்த ஒரு ஆட்டை வளர்ந்து வந்துள்ளார். அந்த ஆட்டுக்கு டைசன் என பெயரிட்டுள்ளார்.
இந்த ஆட்டை வளர்ப்பதற்காக சமர், வீட்டின் முன்பகுதியில் சிறிய செட் அமைத்துள்ளார். இந்த ஆடு, கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளது. இந்தத் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், அந்த ஆட்டை புதன்கிழமை இரவு சில மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வீரசமர் குடும்பத்தினர் வியாழக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, ஆடு திருடப்பட்டிருப்பதை அறிந்து , கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அந்த ஆட்டுக்கு உணவில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, ஒரு வேனில் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவாகியிருக்கும் காட்சிகளை போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.