தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் பிளாஸ்டிக் இல்லாத கல்வி வளாகமாக உருவாக்கப்படுகிறது என்றார் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
இப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல், மேலாண்மையியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இளங்கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு வகுப்புத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
இப்பல்கலைக்கழகமானது வியாழக்கிழமை முதல் பிளாஸ்டிக் இல்லாத கல்வி வளாகமாக உருவாக்கப்படுகிறது. இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர்கள் என்ற இரு பொறுப்பை உடையவர்கள். எனவே, இந்த வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை அறவே அகற்ற வேண்டும் என்ற பொறுப்பு மாணவர்களுக்குத்தான் உள்ளது. சமுதாயத்தை நல்ல விதத்திலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது. ஆசிரியர்களுடைய பொறுப்பு அந்தச் சமுதாய மேம்பாட்டுக்கு நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.
இளங்கல்வியியலில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கான 100 மாணவர்கள் சேர்க்கை நிறைவுற்றது. முதுநிலை கல்வியியல் (எம்.எட்.) பட்டப் படிப்புக்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் என்றார் துணைவேந்தர். பதிவாளர் ச. முத்துக்குமார், புலத் தலைவர் சி. சுப்பிரமணியன், துறைத் தலைவர் கு. சின்னப்பன், இணைப் பேராசிரியர் சா. ரவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.