திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் பெய்துவருவதால், மணிமுத்தாறு அருவியில் வியாழக்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 3-இல் தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் பெய்வதாலும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, சில நாள்கள் மழை குறைந்திருந்த நிலையில், திங்கள்கிழமை முதல் மீண்டும் மழை பெய்துவருகிறது. புதன்கிழமை இரவும், வியாழக்கிழமையும் மாஞ்சோலை மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினர் தடைவிதித்தனர்.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் சிலர் அருவியிலிருந்து அணைக்குச் செல்லும் ஓடைப் பகுதியில் குளித்தனர். பாதுகாப்பு இல்லாததால் அங்கும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், கடலூர், திருச்சி, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களிலிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
நுழைவுக்கட்டணம் பெற்றுக்கொண்டு, அருவிக்குச் செல்ல அனுமதித்த வனத் துறையினர், அதிக தண்ணீர் விழாத நிலையிலும் குளிக்க அனுமதிக்காததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.