நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க, கப்பல் கட்டணத்தில் 70 சதவீத சலுகையை சென்னைத் துறைமுகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை துறைமுக நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீர்வழிப் போக்குவரத்து முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சரக்கு பெட்டகங்களை இந்திய துறைமுகங்களுக்கிடையே பரிமாற்றம் செய்வதை அதிகரிப்பதன் மூலம் கடற்கரையோர வணிகத்தை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப கரையோர வணிகச் சட்டத்தில் சில திருத்தங்களை அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களில் கையாளப்படும் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்களை இறக்கவும், ஏற்றவும் வரும் கப்பல்கள் ஒவ்வொரு துறைமுகமாகச் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. இதேபோல் கரையோர வணிகத்தைப் பெருக்குவதற்காகத் தொடங்கப்பட்ட உள்நாட்டுக் கப்பல்கள் உள்நாட்டுச் சரக்குகளையே கையாண்டு வருகின்றன.
இதை தவிர்த்து, வெளிநாட்டிலிருந்து வரும் சரக்குப் பெட்டங்களை ஏதாவது ஒரு இந்தியத் துறைமுகத்திலேயே மொத்தமாக இறக்கிவிட்டு பின்னர் உள்நாட்டு கடலோரக் கப்பல்கள் மூலம் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திற்கும் எடுத்துச் செல்லவும், ஏற்றுமதிக்காக அனுப்பப்படும் சரக்குப் பெட்டகங்களை இதே வழியில் கையாளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தரைவழிப் போக்குவரத்து குறைந்து, கடல்சார் போக்குவரத்து அதிகரிக்கும். இதன் அடிப்படையில் துறைமுகங்களின் கட்டணங்களை குறைப்பதற்கு வசதியாக மத்திய அரசு கரையோர வணிகச் சட்டத்தில் புதிய திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு சென்னைத் துறைமுகத்துக்கு, கரையோர வணிகம் சார்ந்த சரக்குப் பெட்டகங்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கு கப்பல் சார்ந்த கட்டணத்தில் நேரடியாக 70 சதவீதம் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 25 முறை வந்து செல்லும் கப்பல்களுக்கு 80 சதவீதம் சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.