பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு உதவிபெறும் கலை கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்த நிர்மலாதேவி, தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நிர்மலாதேவி, முருகன் ஆகியோர் தனித்தனியாக தங்களது வழக்குரைஞர்கள் மூலம் ஜாமீன் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி முத்துசாரதா, வழக்கை ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நிர்மலாதேவி ஜாமீன் கோரி ஏழாவது முறையாக விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.