சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
கமுதி அருகே கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை, தனது 4 மகன்களுடன் எஸ்.பி.கே. அண்ட் கோ என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனம் , கல்குவாரி, நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து வருமான வரித்துறையினர், செய்யாத்துரை தொடர்புடைய நிறுவனங்களில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் அருப்புக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய ஊர்களில் 30 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சென்னை போயஸ் தோட்டத் தில் உள்ள செய்யாத்துரையின் உறவினர் தீபக் வீடு, அபிராமபுரத்தில் மற்றொரு உறவினர் வீடு, கோவிலம்பாக்கத்தில் உள்ள தீபக் அலுவலகம், முகப்பேர் மேற்கு, நொளம்பூர், அபிராமபுரம், பெசன்ட் நகரிலுள்ள செய்யாத்துரையின் அலுவலகங்கள், குரோம்பேட்டை, பெசன்ட்நகர், சூளைமேடு மேத்தாநகர், பெரம்பூர், தாம்பரம், சேத்துப்பட்டில் உள்ள உறவினர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் 70-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனையில் ரூ.110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதனிடையே சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.