யோகா போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்திய வம்சாவளி இங்கிலாந்து மாணவருக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடியின் பெரு முயற்சியால் உலகிற்கு இந்தியாவின் கொடையான யோகா 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பயனாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவர் ஈஸ்வர் சர்மா, கனடாவில் நடைபெற்ற உலக மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், இங்கிலாந்து சார்பில் கலந்து கொண்டு யோகாவில் தங்கப்பதக்கம் பெற்றார். இந்நிலையில் ஈஸ்வர் சர்மா இந்த ஆண்டின் சிறந்த இங்கிலாந்து இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது உலக அளவில் அவருக்கு மட்டுமன்றி, யோகாவுக்கும் மிகப் பெரிய கெளரவத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் ஈஸ்வர் சர்மாவிற்கும், யோகா கலையை கற்க தூண்டிய பெற்றோருக்கும், சாதனையை புரிய துணை நின்ற ஆசிரியர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈஸ்வர் சர்மா போன்று பலர் இந்த யோகா கலையை கற்று, அதன் தூதுவர்களாக மாறி இந்தியாவின் ஆரோக்கிய கலையான யோகாவில் உலக அளவில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.