கடையேனுக்கும் கடைத்தேற்றம் என்கிற இலக்கும், தனி உரிமைக்காகக் குரல் எழுப்புவதும் ஊடகங்களின் கடமை என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளம் படைப்பாளிகளை உருவாக்கும் ஏழு நாள்கள் இளந்தமிழர் பயிற்சி பட்டறை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாள் அமர்வில் உரிமை மீட்பில் ஊடகங்கள்' என்ற தலைப்பில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை பேசியது:
உலகளவில் உரிமைக்கான போராட்டங்களில்தான் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. நோய் மற்றும் போர்களால் இறந்தவர்களைவிட உரிமைக்கான போராட்டங்களில் நேரிட்ட உயிரிழப்புகள் அதிகம். இந்தியாவில் இப்போதும்கூட ஆங்காங்கே நிகழும் கொலைச் சம்பவங்களில் உயிரைவிட்டவர்கள் தவறுகளுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சுட்டிக்காட்டும் இடித்துரைப்பாளர்களான எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் தான்.
அண்மையில் திரிபுரா மாநிலத்தில் பத்திரிகையாளர் பொதுவெளியில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
தவறு யாருக்கு இழைக்கப்படுகிறதோ அவர்களுக்காக குரல் கொடுப்பதே உரிமை மீட்பு. அவ்வாறு குரல் கொடுப்பது தீவிரவாதம் அல்ல, அது சமூகத்தின் மீதான அக்கறை. இதைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். அடித்தட்டு மக்கள் கொதிப்படையாமல் இருந்தால்தான் மேல்தட்டு மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். இது பொது உடைமைக்கான வாதம் அல்ல, சமூக நன்மைக்கான சிந்தனை என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். இதை ஊடகங்கள்தான் எடுத்துரைக்க வேண்டும்.
அடித்தட்டில் இருக்கும் சாமானிய மனிதனுக்கு தவறுகள் இழைக்கப்படாமல் அடிப்படைத் தேவைகளை மீட்டுக்கொடுப்பதற்காக குரல் எழுப்புவது ஊடகங்களின் கடமை. ஊடகங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆட்சியாளர்கள் அந்தக் கண்ணாடி வழியாகச் சமூகத்தைப் பார்த்து தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டால் அது நல்லாட்சியாக அமையும் என்றார்.