84 ஆண்டு கால வரலாற்றில் மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல் தமிழக முதல்வர்

மேட்டூர் அணை கட்டப்பட்டு 84 ஆண்டு கால வரலாற்றில், டெல்டா பாசனத்துக்காக தமிழக முதல்வரே அணையை திறந்து வைத்தது இதுவே முதல் முறையாகும்.
84 ஆண்டு கால வரலாற்றில் மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல் தமிழக முதல்வர்


மேட்டூர் அணை கட்டப்பட்டு 84 ஆண்டு கால வரலாற்றில், டெல்டா பாசனத்துக்காக தமிழக முதல்வரே அணையை திறந்து வைத்தது இதுவே முதல் முறையாகும்.

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி தமிழக அணைகளை நிரப்பி வருகிறது.

அகண்ட காவிரியை கடந்த சில ஆண்டுகளாக வறண்ட காவிரியாகவே தமிழர்கள் கண்டு மனம் வெதும்பி வந்த நிலையில், தற்போது கரைபுரண்டு ஓடி வரும் வெள்ளம் மனதை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவின் முக்கிய அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுக்க காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு காவிரியில் ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 கன அடியை எட்டிவிட்டது. அணையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இது படிப்படியாக இரவுக்குள் 20 ஆயிரம் கன அடியாக உயரும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா பாசனத்துக்காக இன்று காலை அணையில் இருந்து முதல் கட்டமாக 2,000 கன அடி நீரை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் மதகுகளுக்கான பொத்தானை அழுத்தி பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். 

அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி தமிழகத்தின் கடைமடைப் பகுதிகளைத் தேடி ஓடிய காவிரி நீரில் மலர்களைத் தூவினார் முதல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com