தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இல்லை என அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கிய வகுப்பு நடைபெற்று வருகிறது. நிகழ் கல்வி ஆண்டு முதல் முதுகலை இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் கிடையாது. இன்றைய இளைஞர்கள் தமிழின் முக்கியத்துவத்தை அறியும் நோக்கிலும், இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், தமிழின் வளர்ச்சியைப் பன்னாட்டு அளவில் கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு முடிவெடுத்துள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் படிப்பில் சேரலாம்.