நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.
தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 198 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மேல்முறையீட்டு மனுவில், நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.
மேலும், 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 198 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்கினால் அவரது மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும். மொத்த மதிப்பெண்ணே 720 தான் என்ற நிலையில், கருணை மதிப்பெண்ணாக தமிழில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 198 மதிப்பெண்ணை எப்படித் தர முடியும்? கருணை மதிப்பெண்ணால் குழப்பம் மட்டுமே ஏற்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.