புதுச்சேரி சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்துள்ளார்
கடந்த ஜூலை 2-ஆம் தேதி தொடங்கிய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து 2 நாள்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், தொடர்ந்து 4, 5-ஆம் தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதமும் நடைபெற்றது.
தொடர்ந்து, 9-ஆம் தேதி முதல் பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது பெரும்பாலான உறுப்பினர்கள் புதுவைக்கு முழு அதிகாரம் பெற பேரவையை ஒத்திவைத்துவிட்டு தில்லிக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஜூலை 20-ஆம் தேதி தில்லிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதனால், தினமும் காலை மட்டுமே நடைபெற்று வந்த பேரவைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலையும் நடைபெற்றது.
ஏற்கெனவே, பேரவைக் கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரத்துக்கு முன்பே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று ஒத்திவைத்துள்ளார்,