காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் அதன் அதிகப்பட்ச நீர்மட்டத்தை எட்டியதையடுத்து முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்.
அணைகள் நிரம்பின: மண்டியா மாவட்டம், கன்னம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, மைசூரு மாவட்டத்தின் டி.நரசிப்புரா வட்டத்தில் உள்ள கபினி அணை வியாழக்கிழமை நிரம்பியது.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 58,719 கன அடி, கபினி அணைக்கு விநாடிக்கு 39,568 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 26,844 கன அடி, கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளும் நிரம்பியதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் காவிரி நதிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.