நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை இரவு 135 அடி உயரத்தை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.60 அடியாக இருந்தது. தற்போது அணைக்கு விநாடிக்கு 4,670 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் வெளியேற்றம் 2,300 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5,539 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வியாழக்கிழமை இரவு அணையின் நீர்மட்டம் 135 அடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரியாறு அணையில் 15 மில்லி மீட்டர், தேக்கடியில் 9 மி.மீ., கூடலூரில் 1.7 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.