சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு அமர்வை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் மாயமானது தொடர்பாக கடந்த ஆண்டு செப்.12-ஆம் தேதி புகார் அளித்தேன். அதன் பேரில் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவே, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்துசமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு தலைமையில் சிறப்பு அமர்வை அமைத்து தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அமர்வில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி, விசாரணையை வரும் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.