பொறியியல் கலந்தாய்வை ஆக.31 வரை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்

பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் 31 வரை நடத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் 31 வரை நடத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு தேதியை நீட்டிக்கக் கோரி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழக்குரைஞர்கள் வி. கிரி, கே.வி. விஜயகுமார் ஆஜராகி, 'தற்போது தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால், இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பார்கள். இதனால் கலந்தாய்வு தேதியை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.
வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வில் எவ்வளவு மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 20) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வழக்குரைஞர் வி. கிரி, தமிழக அரசு வழக்குரைஞர் கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள், பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
பின்னணி: தமிழகத்தின் 509 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பி.இ. கலந்தாய்வை ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிப்பதை இப்பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், 2018-19 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சற்று தாமதமாகத் தொடங்கப்பட்டது. அதாவது ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது.
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்குப் பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. இதுபோன்ற காரணங்களால், பி.இ. கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜூலை 25-இல் பி.இ. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் பி.இ. பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு வரும் புதன்கிழமை (ஜூலை 25) தொடங்கும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பி.இ. படிப்புகளில் நிகழ் கல்வியாண்டில் (2018-19) மாணவர்களைச் சேர்க்க பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெறும். 
5 கட்டங்களாக...அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 42 சேவை மையங்களில் 5 கட்டங்களாக ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு முடிவடைந்ததும் 2 நாள்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது குறித்து அங்குள்ள அதிகாரிகள் விளக்கம் அளிக்கவுள்ளனர் என்றார் அமைச்சர் அன்பழகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com