எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அகில இந்திய கலந்தாய்வு நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வினாத்தாளைப் பயன்படுத்தி நீட் தேர்வை எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கருணை மதிப்பெண் வழங்கி புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் தீர்ப்பளித்தது. அதன் காரணமாக அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. எனவே, தமிழகத்தில் நிறுத்தப்பட்ட கலந்தாய்வை மீண்டும் தொடங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அகில இந்திய இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் நீதிமன்றத் தடையின் காரணமாக வெளியிடப்படவில்லை.
மீண்டும் தடை: இந்நிலையில் அகில இந்தியக் கலந்தாய்வுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை அளித்த தீர்ப்பின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளம் மூலம் நடத்தப்பட்ட அகில இந்திய கலந்தாய்வு நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.