சென்னை கொளத்தூர் - இரட்டை ஏரி சாலை சந்திப்பு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் அமைந்திருந்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்து மண்டல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை கொளத்தூர்-இரட்டை ஏரி சிக்னல் அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் 20சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாக, செக்ரடேரியட் காலனியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 3-ஆம் தேதி கோயிலை பூட்டி சீல் வைக்கவும், மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் 6-ஆவது மண்டல அதிகாரி சத்தியநாதன் தலைமையில் பொறியாளர் சேகர், வட்டாட்சியர் மற்றும் மண்டல ஊழியர்கள் சனிக்கிழமை கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பக்தர்கள், இந்து முன்னணி தலைவர் இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர்கள் எம்.வி.சசிதரன், சென்னை சிவா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோயில் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வில்லிவாக்கம் சரக உதவி ஆணையர் முத்துமாணிக்கம், ஆய்வாளர்கள் பிரகாஷ், மாரியப்பன், ஆகியோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.