காவிரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே.வாசன் கூறினார்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
நீண்ட நாள்களாக விவசாயிகள் எதிர்பார்த்து வந்த காவிரி நீர் கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) திறக்கப்பட உள்ளது. ஆனால் தங்குதடையின்றி நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை மாநில அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. விரைவில் கடைமடைப்பகுதி வரை தண்ணீர் செல்ல தமிழக அரசு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. எனவே, விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, புதிய கடன்கள் வழங்கவேண்டும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தண்ணீர் திறக்கப்பட்டு, அந்தத் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.