நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுகவினர் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் வருவமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு இழைத்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு நான்கு நாள்களுக்கு முன்பு முதல்வரின் சம்பந்தியின் பங்குதாரர் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பாஜகவுக்கு நிறைவேறி விட்டது.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட மத்திய அரசு எடுத்த பிரத்யேக முயற்சிதான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல. இதுவரை தமிழக நலன்களை வஞ்சிப்பதில் அதிமுக - பாஜக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து செய்த துரோகம், நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பாஜக அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டு, மத்திய அரசை ஆதரித்திருக்கும் அதிமுக அரசையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.