நாட்டின் அடுத்த தலைவராக ராகுல்காந்தி உருவாகியுள்ளார் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.
தனது சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியாக பெத்தானியபுரம் இருப்பதால், குறிப்பிட்ட பள்ளம் சீரமைப்புப் பணியை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டதால், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக அதிமுக வாக்களித்தது. தமிழக உரிமைகளை எப்போதும் அதிமுக விட்டுக்கொடுக்காது. மாநில நலனுக்காக மத்திய பாஜக அரசு நிதி வழங்கி வருகிறது. எனவே, பாஜகவுக்கு ஆதரவளித்ததில் தவறில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நல்ல பண்பாளர், நன்றாகப் பழகுகிறார். அவரது தந்தை வழியில் அவர் நாட்டின் அடுத்தத் தலைவராக உருவாகியுள்ளார். பிரதமரை அவர் கட்டித் தழுவியது அரசியல் நாகரீகம் என்றார் அமைச்சர்.