பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 ராஜபாளையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப் பள்ளியில் 296 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6 ஆசிரியைகளும், 9 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். வாசுதேவநல்லூரைச் சேர்ந்த முருகேசன் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 இந்நிலையில், இங்கு பயிலும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகேசன் பாலியல் தொந்தரவு அளித்ததுடன், ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகார் கூறினர். மேலும் முருகேசனை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் சர்வேஸ்வரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 மாலையாபுரத்தைச் சேர்ந்த பூமாரி என்பவர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் முருகேசனிடம் போலீஸார் மாலை முதல் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் அனைத்து மகளிர் நிலைய போலீஸார் சனிக்கிழமை அவரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com