பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர்
சனிக்கிழமை பேட்டியளித்த போது கூறியது: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் வரும் என திடமாக நம்புகிறோம். மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்துக்குள் 2 கோடி உறுப்பினர்களுக்கும் மேலாகச் சேருவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக மண்டலப் பொறுப்பாளர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே எங்களது செயல்பாடுகள் தேர்தலை நோக்கியே நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். துரோகம் செய்த 10 பேரை ஜனநாயக முறைப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதால் அங்கெல்லாம் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
மக்களவை உறுப்பினர்கள் எங்களுடன் யாருமில்லை. யார் மாற்றி வாக்களித்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.
மத்திய அரசுக்கு கோரிக்கை: மக்களவைத் தேர்தலுக்காக நிறைய பேர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அமமுக தலைமையை ஏற்போருடன் கூட்டணி அமைப்போம். திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. மதச்சார்ப்பற்ற கட்சியாகவே நாங்கள் இருப்போம். தமிழக மக்களின் நலன்களுக்காக உழைப்போம் என்றார் டிடிவி தினகரன்.