கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டெம்பிள் ஜூவல்லரி என்கிற கோயில் ஆபரணத்துக்குப் புவிசார் குறியீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைத்துள்ளது.
தஞ்சாவூரில் பயனாளி சான்றிதழைக் கோயில் ஆபரண கைவினைக் கலைஞர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சஞ்சய்காந்தி, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நகைகள் தயாரிப்பு இருந்தாலும், நாகர்கோவில் அருகேயுள்ள வடசேரியில் தயாரிக்கப்படுகிற கோயில் நகைகள் தனித்துவம், பாரம்பரியம், கலை நயம், வரலாற்றுப் பூர்வீகம், தனித் தொழில்நுட்பம் ஆகியவற்றை தனக்கே உரிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. வடசேரி பகுதியில்தான் கைவினைக் கலைஞர்களைக் கொண்டு தென்னிந்தியாவின் பல்வேறு கோயில்களுக்கு ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு இவர்கள் ஆபரணங்களைச் செய்துள்ளனர்.
மேலும், திருவாங்கூர் தேசத்தை ஆண்ட மன்னர்கள் அங்குள்ள கோயில்களுக்கும், ராமநாதபுரம் மன்னர்கள் செட்டிநாடு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் வடசேரி கைவினைக் கலைஞர்களை வரவழைத்து ஆபரணங்களை செய்துள்ளனர். தவிர, நெத்திச்சூட்டி, தலை சாமானம், மரகண்டி மாலை, ராக்கொடி, மாங்காய் மாலை, ஜடை வில்லை, ஒட்டியாணம், தோடு, ஜிமிக்கி ஆகியவையும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. தற்போது 350 கைவினைக் கலைஞர்கள் உள்ளனர் என்றார் சஞ்சய் காந்தி.