மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியாக உயர்வு: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.41 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியாக உயர்வு: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.41 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை இன்றைக்குள் (திங்கட்கிழமை) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகள் நிரம்பிய பின்னரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்தது. அணைக்கு நொடிக்கு 61,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

120 அடி உயரம், 93.45 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியாக உயர்ந்த நிலையிலும், அணைக்கு தொடர்ந்து 68,489 கனஅடி நீர்வரத்து இருந்து வருவதால், அணையின் பாதுகாப்பு நலன் கருதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 22,500 கன அடி தண்ணீரும், அணையின் உபரி நீர் போக்கியான 16 மதகுகளின் வழியாக நொடிக்கு 7,500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு பாசனக் கால்வாய்களில் நொடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நொடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு இப்போது தனது முழு கொள்ளளவான 120 அடியை இன்றைக்குள் (திங்கட்கிழமை) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேட்டூர் அணை வரலாற்றில் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது இது 39-வது ஆண்டு ஆகும். நேற்று 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட போது பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் 16 கண் பாலம் பகுதியையொட்டி அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் காவிரி கரையையொட்டிய கோல்நாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் காவிரி ஆற்றங்கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், நீச்சல் அடிப்பதையோ, செல்பி எடுப்பதையோ, காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு உள்பட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்படும். தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணைக்கு வரும் நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 30,000 கன அடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் பகல் 12 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டும் என்றும் 16 கண் மதகுகளில் திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com