சேலம்: மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ளது. இதுவரை அணை 38 முறை மட்டுமே முழுக் கொள்ளவை எட்டியுள்ள நிலையில், இது 39வது முறையாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரியாக பொழியாத நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
சரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மேட்டூர் அணை நீர் மட்டம் அதன் முழுக் கொள்ளளவை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணை நிரம்பியதால், அணையின் 16 மதகுகள் மூலம் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு கடந்த 2005ம் ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக 200 டிஎம்சி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. அப்போது வினாடிக்கு 2,84,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதே மேட்டூர் அணை வரலாற்றில் திறக்கப்பட்ட அதிகபட்ச தண்ணீராக உள்ளது.
அதன்பிறகு 2013ம் ஆண்டு பருவ மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி, அணையில் இருந்து 19 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.