மதுரை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ராஜு என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் கூறியதாவது:
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
குறிப்பாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கல்வி உரிமைச் சட்ட விதிகளின் படி 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வியென்பது அடிப்படை உரிமை ஆகும்.
இந்த உரிமை அவர்களுக்குக் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.