நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்களை உயர்த்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. நாட்டில் 5க்கும் குறைவான ரயில்களில் மட்டுமே ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலான மிகக் குறைந்த கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நவீன இருக்கைகள், வை-ஃபை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாலும், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களாலும் அனைத்து ரயில்களுக்கும் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் நஷ்டத்தில் இயங்குவதாகவும், ஆண்டுக்கு ரூ.24 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய ரயில் சேவை என்பதால் நஷ்டம் ஏற்பட்டாலும் இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவதே பெருமையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மலை ரயிலுக்கு உயர்த்தப்படவுள்ள கட்டண விவரம் வருமாறு(பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்):
மேட்டுப்பாளையம்-உதகை: முதல் வகுப்பு (ரூ.195) ரூ.395, இரண்டாவது வகுப்பு (ரூ.30) ரூ. 130, முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு (ரூ.15) ரூ.75.
மேட்டுப்பாளையம்-குன்னூர்: முதல் வகுப்பு (ரூ.174) ரூ.295, இரண்டாம் வகுப்பு (ரூ.25) ரூ.65, முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு (ரூ.10)ரூ.45.
குன்னூர்-உதகை: முதல் வகுப்பு (ரூ.140) ரூ. 225, இரண்டாம் வகுப்பு (ரூ.25)ரூ.70, முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு (ரூ.10) ரூ.35.