சென்னை: உடல் நலக் குறைபாடு காரணமாக ஓய்விலிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய அறிக்கை ஒன்றை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல் நலமின்மையால் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசத்தைச் சீராக்குவதற்காக அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி குழாய் அண்மையில் காவேரி மருத்துவமனையில் மாற்றியமைக்கப்பட்டது. அதன்பிறகு அவர் காய்ச்சலில் அவதிப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக ஓய்விலிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய அறிக்கை ஒன்றை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் கருணாநிதிக்கு இயல்பான முதுமையின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் உண்டாகி அதற்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
அவரது வயது மற்றும் உடல்நிலை கருதி அவரை யாரும் வந்து பார்க்க வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.